என்னே அக்கறை!எம்.சோமு, விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: "2ஜி' விவகாரத்தில், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட மறுக்கும் மத்திய அரசின் சார்பில், நிதி அமைச்சர், புத்தம் புது குண்டு ஒன்றை கொளுத்திப் போட்டிருக்கிறார்."கடந்த 1998ல், தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகளால், அரசுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?' என்று வினா எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்து எட்டு முழு ஆண்டுகள் முடியப் போகிறதே... இத்தனை ஆண்டுகளாக எங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்? அப்போதே ஒரு கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டியது தானே? பிரணாப் கூறுவது போல், 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்து, காங்கிரஸ் இவ்வளவு காலம் அமைதியாக இருந்திருக்கிறதென்றால், இந்த நாட்டின் மீதும், அதன் சொத்தின் மீதும், அது எவ்வளவு அலட்சியமாக இருந்து வந்திருக்கிறது என்பது தெரிகிறது.அது சரி... காங்கிரசுக்கு நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின், வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் 70 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை, சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? அதைப் பற்றி யாராவது பேசினாலேயே, அரசுக்குப் பற்றிக்கொண்டு வருகிறதே!அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும், அதன் பிரதிநிதிகளும் கூறும் எந்தவொரு சமாளிப்பையும், எதிர் குற்றச்சாட்டுகளையும், மக்கள் நம்பத் தயாராக இல்லை. 1.76 லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல், மக்கள் ஒவ்வொருவர் மனதிலும், பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. அதன் விளைவை, எதிர்வரும் தேர்தல்களில் காங்கிரஸ் சந்தித்து, அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்.
முன் உதாரணமாக திகழ வேண்டாமா?ஜே.ராஜகுமார், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: பொது வாழ்வில் ஈடுபட்ட அன்றைய தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோரை நினைத்து பார்க்கும்போது, இன்றைய பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தங்கள் தகுதிக்கு மேல், மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர். அன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர். அதனால்தான், அவர்களால் மக்களுக்கு தூய ஆட்சியை தர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் சேவையை செய்தனர். அதனால், இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்."தூய ஆட்சி, எளிமை யுள்ள தலைவரை முதல்வராகக் கொண்ட ஆட்சி தேவை' என, ஆதங்கப்படுகிறார் சிதம்பரம். ஆனால் அவர், காமராஜரை போன்று சாமானியன் அல்லவே; கோடீஸ்வரர் தானே. அவர் ஆதங்கம் உண்மையாக இருப்பின், கோடீஸ்வரரான அவர், சாமானியர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஆனால், "போதும்... இனி நான் மத்திய அமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, இளைய சமுதாயத்திற்கு வழி விடும் செயலை செய்து, முன் உதாரணமாக காட்சி தரலாமே!அவருக்கும் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் இல்லை என்று சொல்ல முடியுமா? தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற அடிப்படையில் தானே, நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.